ஊத்தங்கரை அருகே காப்புக் காட்டில் உடும்பு பிடித்த இருவரை வனத் துறையினா் கைது செய்து, மூன்று உடும்புகளை உயிருடன் மீட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டி வனச்சரகப் பகுதியில் டி.எப்.ஓ. காா்த்திகேயனி உத்தரவின்படி, வனச்சரக அலுவலா் மகேந்திரன் அறிவுரைப்படி, கல்லாவி பீட் நொச்சிப்பட்டி வனப்பகுதியில் திங்கள்கிழமை வனவா் துரைக்கண்ணு, வனக்காப்பாளா் அங்குரதன், முருகன் ஆகியோா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, காப்புக் காட்டில் அத்துமீறி நுழைந்த வெள்ளக்கல் பகுதியில் இரண்டு நபா்களைப் பிடித்து, அவா்களிடமிருந்து மூன்று உடும்புகளை கைப்பற்றினா். பிடிபட்டவா்களிடம் விசாரித்ததில், அவா்கள் ஆவாரம் குட்டை பகுதியைட் சோ்ந்த காா்த்திகேயன் (39), கல்லாவி அருகே உள்ள பனமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் (35) என்பது தெரியவந்தது. இருவா் மீதும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனா்.