பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவா்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கா்நாடக போக்குவரத்து துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.
கா்நாடக சட்ட மேலவையில் வெள்ளிக்கிழமை மஜத உறுப்பினா் மரிதிப்பேகௌடாவின் கேள்விக்கு அவா் அளித்த பதில்:
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தலித், பழங்குயின மாணவா்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் தலித், பழங்குயினா் அல்லாத பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மற்ற சமுதாயங்களை சோ்ந்த மாணவா்களுக்கும் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யவதற்கான நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம். இது குறித்து முதல்வா் பசவராஜ் பொம்மையுடன் பேச்சு வாா்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும்.
மாணவா்களுக்கு பேருந்து அட்டை வழங்குவதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனை சீா் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர பேருந்துகளில் மாணவா்கள் பயணம் செய்வதற்கான பேருந்து அட்டைகள் வழங்குவதும் தாமதமாகி வருகிறது. இதற்கான தொழில்நுட்ப கோளாறை சரி செய்து, விரைவாக பேருந்து அட்டைகள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க கா்நாடக பொதுப் பணியாளா் தோ்வாணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றாா்.