சுரைக்காய் மடுவு: வீரப்பனால் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 29 ஆண்டுகளுக்குப் பிறகு அஞ்சலி
By DIN | Published On : 09th April 2022 01:05 PM | Last Updated : 09th April 2022 01:05 PM | அ+அ அ- |

வீரப்பனால் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு.
சந்தன கடத்தல் வீரப்பனால் நிகழ்த்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 29 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
சந்தன கடத்தல் வீரப்பனை தேடுவதற்காக அமைக்கப்பட்ட ஜங்கில்பட்ரோல் (வனரோந்து காவல்படை)(Jungle patrol) அப்போதைய கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். 1993ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொளத்தூர் வாரச்சந்தையில் வீரப்பன் கூட்டாளிகள் எஸ்பி கோபால கிருஷ்ணனுக்கு சவால் விட்டு போஸ்டர் ஒட்டினார்கள். இதனையடுத்து 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி எஸ்பி கோபாலகிருஷ்ணன் தலைமையிலான ரோந்து காவல்துறையினரும், காவல்துறை இன்பார்மர்களும், வனத்துறையினரும் வீரப்பனை தேடிச் சென்றனர்.
இதையும் படிக்க- மீண்டும் சிக்ஸர் மழை: இருமுறை அதிசயம் நிகழ்த்திய தெவாதியா
தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள சுரக்காமடுவு என்ற இடத்திற்கு இரண்டு காவல் வாகனங்களில் சென்றனர். அப்போது வீரப்பன் 14 இடங்களில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி 22 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து உயிரிழந்தனர். இதில் காவல்துறை இன்பார்மர்கள் 15 பேரும், காவல்துறையினர் 5 பேரும் வனத்துறையினர் இருவரும் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் அப்போதைய காவல் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணனும் அவரது உதவியாளர் கிளை மன்சும் உயிர் பிழைத்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் நடைபெற்று 29 ஆண்டு ஆகிறது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு கன்னிவெடி வெடித்த இடமான சுரைக்காய் மடுவில் இன்று பகல் 11.05 மணியளவில அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது வனரோந்து காவல் படையில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், தற்போது பணியில் இருக்கும் காவல் துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டி, காவல் ஆய்வாளர் ஆறுமுகம் காவல் உதவி ஆய்வாளர் துரைசாமி மற்றும் அப்போது வன ரோந்து காவல் படையில் இருந்த காவல்துறையினரும், உயிரிழந்த இன்பார்மர் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
அப்போது உயரிழந்த இன்பார்மர் குடும்பத்தினர் காவல்துறையினருக்கு உதவி செய்ய வந்து உயிரிழந்து 29 ஆண்டு ஆகியும் அரசு எவ்வித உதவியும் செய்யவில்லை என்று கதறி அழுதனர்.