இணையவழி விளையாட்டுக்குத் தடைவிதிக்கும் சட்டத்திருத்தத்தை ரத்துசெய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகத்தில் பணம் பரிமாறப்படும் அல்லது பணயம் வைக்கப்படும் அனைத்துவகையான இணையவழி விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கும் சட்டத்திருத்தத்தை கர்நாடக அரசு கொண்டுவந்தது. இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநலநலமனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இணையவழி விளையாட்டுகளுக்கு தடைவிதிக்க கர்நாடக காவல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
இதையும் படிக்க- கைவீசம்மா.. கைவீசு.. கைவிரிக்கும் மழலையர் பள்ளிகள்
இந்த சட்டத்திருத்தம் அக்.5-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்திருத்ததை எதிர்த்து அகில இந்திய விளையாட்டியல் கூட்டமைப்பு, இந்திய கற்பனை விளையாட்டு கூட்டமைப்பு, கைப்பேசி பிரீமியர் லீக், கேம்ஸ்24இன்டு7, ஏஸ்2த்ரீ, ஜங்கிலீ கேம்ஸ், கேம்ஸ்கிராஃப்ட் மற்றும் பெசிபிக் கேம்ஸ் ஆகியவை தனித்தனியாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
கர்நாடக காவல் சட்டத்திருத்தம், அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானதாக இருப்பதால், இச்சட்டத்தை ரத்துசெய்ய வேண்டுமென்று மனுவில் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த மனுக்களை முதலில் விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித், இவற்றை கூடுதல் அமர்வுக்கு மாற்றினார். அதை தொடர்ந்து, தலைமைநீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் ஆகியோர் அடங்கிய கூடுதல் அமர்வு விசாரணை நடத்தியது.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், டிச.22-ஆம் தேதி அன்று தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தது. இந்த வழக்கின் தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை வழங்கியது. அதில், இணையவழி விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கும் கர்நாடக காவல் சட்டத்திருத்தத்தை ரத்து செய்துள்ளது.
ஆனால், பணயம் வைத்து விளையாடுவது அல்லது சூதாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்க, அரசியலமைப்புச்சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவர தடையில்லை என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.