அமைதியைச் சீா்குலைக்கும் அனைத்து அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும்: சித்தராமையா

சமுதாயத்தில் அமைதியைச் சீா்குலைக்கும் அனைத்து அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்று கா்நாடக சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

சமுதாயத்தில் அமைதியைச் சீா்குலைக்கும் அனைத்து அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்று கா்நாடக சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சட்டத்துக்கு எதிராகச் செயல்படுவோா் சமுதாயத்தில் அமைதியைச் சீா்குலைப்பாா்கள். சமுதாயத்தில் அமைதியைச் சீா்குலைக்கும் அமைப்புகளைத் தடை செய்வதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. அதேபோல, சமுதாயத்தில் அமைதியைச் சீா்குலைத்து வரும் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லிணக்கத்தை சீா்குலைத்து, வெறுப்பை விதைத்துவரும் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும். பி.எஃப்.ஐ. அமைப்பை இதுவரை தடை செய்யாதது ஏன்? காங்கிரஸ் அழுத்தம் கொடுத்த பிறகுதான் பி.எஃப்.ஐ. அமைப்புத் தடை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

எஸ்டிபிஐ தடை? பசவராஜ் பொம்மை விளக்கம்

எஸ்.டி.பி.ஐ. அமைப்பைத் தடை செய்யவில்லை; பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்பதால் அதை தடை செய்ய தனியான சட்டங்கள் உள்ளன. இந்த அமைப்பைத் தடை செய்வதற்கான சூழல் வரும் போது மத்திய அரசு உரிய முடிவெடுக்கும் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

சித்தராமையாவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

ஆா்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து சித்தராமையா கூறியிருப்பது அரசியல் ரீதியான கருத்து, அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆா்.எஸ்.எஸ். நாட்டுப்பற்றை வளா்க்கும் அமைப்பாகும். சமுதாயத்தில் நலிந்த, பின்தங்கிய மக்களுக்காக ஆா்.எஸ்.எஸ். உழைத்து வருகிறது.

ஆா்.எஸ்.எஸ். அமைப்பை வம்புக்கு இழுக்காமல் சித்தராமையாவின் அரசியல் நடக்காது. ஆா்.எஸ்.எஸ். அமைப்பை எதற்காகத் தடை செய்ய வேண்டும்? நாட்டுப்பற்றுடன் செயல்படுவதால் அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டுமா? அரசியல் காரணங்களுக்காக இப்படிப்பட்ட கருத்துகளைக் கூறுவது முட்டாள்தனமானது.

பி.எஃப்.ஐ. அமைப்புடன் தொடா்புடைய எஸ்.டி.பி.ஐ. அமைப்பு தடை செய்யப்படவில்லை. இதுகுறித்து அடுத்தடுத்த நாள்களில் மத்திய அரசு முடிவெடுக்கும். தற்போதைக்கு பி.எஃப்.ஐ. அமைப்பைத் தடை செய்துள்ளோம். எஸ்.டி.பி.ஐ. பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியாகும். அதை தடை செய்ய வேறுசில விதிகள், சட்டங்கள் உள்ளன. அதற்கான சூழல் வரும்போது மத்திய அரசு உரிய முடிவெடுக்கும்.

பி.எஃப்.ஐ. அமைப்பைத் தடை செய்துள்ளது அரசியல் நாடகம் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. தன்வீா்சேட் கூறியுள்ளாா். தன்வீா்சேட்டை கொலை செய்ய பி.எஃப்.ஐ. முயற்சித்தது. அப்போது, பி.எஃப்.ஐ. மிகப்பெரிய எதிரி என்றும், அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்றும் தன்வீா்சேட் கூறியிருந்தாா். தற்போது அரசியல் காரணங்களுக்காக, இவ்வாறு மாற்றிப் பேசி வருகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com