பொன்னேரி, ஜன. 28: தைப் பூசத்தையொட்டி, பொன்னேரியில் உள்ள அகத்தீஸ்வரர் திருக்கோயில் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 29) தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ளது.
÷திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பஸ் நிலையம் அருகே ஆரணி ஆற்றங்கரையோரம் ஆனந்தவல்லி அம்மை வலம் கொண்ட அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக் கோயில் முகப்பில் உள்ள குளத்தில் நீராடினால் அனைத்து நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். இக் குளத்தில் உள்ள நீர் இதுவரை வற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
÷இந்நிலையில், தைப் பூசத்தையொட்டி, இக்கோயில் திருக்குளத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் தெப்போற்சவம் நடைபெற உள்ளது.
÷முதல் நாள் தெப்ப உற்சவத்தில் விநாயகர், அகத்தீஸ்வரர், ஆனந்தவல்லி தாயார் ஆகியோரும், 2-ம் நாளான சனிக்கிழமை விநாயகர், சந்திரசேகர மூர்த்தி சுவாமிகளும், 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை விநாயகர், முருகர், வள்ளி, தெய்வயானை சுவாமிகளும் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவர். இதையொட்டி, இரவு வேளையில் விநாயகர், முருகர், வள்ளி, தெய்வயானை திரு வீதி உலா வைபவமும் நடைபெற உள்ளது.
÷விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர்களும், பக்த பெருமக்களும் செய்து வருகின்றனர்.