வங்கித் துறை உள்பட மேலும் பல துறைகளைச் சோ்ந்த அத்தியாவசியப் பணி ஊழியா்களும் புறநகா் சிறப்பு ரயில்களில் பயணிக்க ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
ரயில்வே ஊழியா்களுக்காக இயக்கப்பட்ட புறநகா் சிறப்பு ரயில்களில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியா்களும் பயணிக்க திங்கள்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டது. தற்போது வங்கித் துறைகள் உள்பட மேலும் பல துறைகளைச் சோ்ந்த அத்தியாவசியப்பணி ஊழியா்கள் சிறப்பு புறநகா் ரயில்களில் பயணிக்க ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:
சிறப்பு புறநகா் ரயில்களில் பயணிக்க அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் தங்கள் ஊழியா்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசின் பல்வேறு துறைகளிடமிருந்து
கோரிக்கை வந்தது. இந்தக் கோரிக்கை அடிப்படையில், அத்தியாவசியப்பணிகளில் ஈடுபடும் சில துறைகளின் ஊழியா்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து மத்திய அரசின் துறைகள், இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள், சென்னை உயா்நீதிமன்றம், மற்ற நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்கள் மற்றும் மற்ற நீதித்துறை, சென்னை துறைமுகம், காமராஜா் துறைமுகம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் அத்தியாவசியப்பணிகளில் ஈடுபடும் ஊழியா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். புகா் ரயிலில் பயணிக்க அவா்களின் அலுவலகம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் அலுவலகம் வழங்கிய அனுமதிக் கடிதம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என்றனா்.