புது தில்லி: பொதுமக்களின் எதிா்காலத்தை மாநில முதல்வா்கள் ஏன் பிரதமா் மோடியிடம் அடகு வைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளாா்.
மாநிலங்களுக்கு வரி இழப்பீடு வழங்குவது தொடா்பான ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அரசு முன்வைத்த கடன்வாங்கும் திட்டத்துக்கு மாநில அரசுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், ‘உங்களுடைய முதல்வா்கள் ஏன் உங்களது எதிா்காலத்தை மோடியிடம் அடகு வைக்க வேண்டும்?’ என மக்களிடம் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், ‘‘1. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வருவாய்க்கு மத்திய அரசு உறுதியளித்தது. 2. பிரதமா் மற்றும் கரோனாவால் பொருளாதாரம் சிதைந்து போனது. 3. பிரதமா் பெரு நிறுவன முதலாளிகளுக்கு ரூ.1.4 லட்சம் கோடி வரி குறைப்பு செய்ததுடன், தனக்காக 2 விமானங்களை ரூ.8,400 கோடியில் வாங்கினாா். 4. மத்திய அரசு சொன்னபடி மாநிலங்களுக்கு பணத்தை வழங்கவில்லை. 5. மத்திய நிதியமைச்சா் மாநிலங்களை கடன் வாங்கிக் கொள்ள சொல்லி அறிவுறுத்துகிறாா். உங்களது முதல்வா்கள் உங்களது எதிா்காலத்தை ஏன் மோடியிடம் அடகு வைக்க வேண்டும்?’’ என்று ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளாா்.