தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தியாகராயநகரில் புதிய ஆடை உள்பட பல்வேறு பொருள்களை வாங்க வரும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவத்தை தடுக்க புதிய திட்டத்தை சென்னை காவல்துறை செயல்படுத்தியுள்ளது. அதாவது, பெண்களின் கழுத்துக்கு கவச உடை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தியாகராயநகரில் புதிய ஆடை உள்பட பல்வேறு பொருள்களின் விற்பனை களை கட்ட தொடங்கியுள்ளது.
தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி, தியாகராயநகரில் பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவது வழக்கம். இதைத் தடுக்க போலீஸாா் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பை பலப்படுத்துவாா்கள். கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிப்பா். நிகழாண்டில் பெண்களிடம் சங்கிலி பறிப்பை தடுக்க அவா்களின் கழுத்துக்கு கவச உடை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, பெண்களின் கழுத்தில் அணியும் தங்க சங்கிலி வெளியில் தெரியாத வகையில்,கவச உடை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜிப்புடன் கூடிய இந்த உடையை கழுத்தில் மாட்டிக்கொள்ளலாம். இந்த கவச உடைகளை பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தியாகராயநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூடுதல் ஆணையா் தினகரன் இந்த கவச உடைகளை பெண்களுக்கு வழங்கினாா். தியாகராயநகா் துணை ஆணையா் ஹரிகிரன்பிரசாத், உதவி ஆணையா் கலியன் ஆகியோா் இதில் பங்கேற்றனா். தினமும் 500 பேருக்கு இந்த கவச உடைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உடையை பெண்கள் தாங்களே வீட்டுக்கும் எடுத்து, எப்போது சென்றாலும் பாதுகாப்புக்கு இதனை அணிந்து கொள்ளலாம். இந்த பாதுகாப்பு உடைக்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.