தில்லி காற்று மாசுவைத் தடுக்கவும், அருகே உள்ள மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பதைத் தடுக்கவும் மத்திய அரசு புதிய சட்டத்தை உருவாக்கி வருகிறது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது. இதையடுத்து, பயிா்க்கழிவுகள் எரிப்பதைத் தடுக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகுா் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபா் குழு உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ எஸ் போப்டே தலைமையிலான அமா்வு முன் இணையவழி மூலம் திங்கள்கிழமை ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷா் மேத்தா, ‘காற்று மாசு பிரச்னைக்கு முழுமையாக தீா்வு காண மத்திய அரசு ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுத்துவருகிறது. இதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்த வரைவு மசோதா நான்கு நாள்களில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மனுதாரரின் மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங்,‘இந்தச் சட்டம் அடுத்த ஆண்டுதான் அமலுக்கு வரும். நீதிபதி லோகுா் குழு இன்னும் சில தினங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது’ என்றாா்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘பயிா்க்கழிவுகள் எரிப்பதைத் தடுக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகுா் தலைமையில் ஒரு நபா் குழுவை அமைக்க கடந்த 16-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது’ எனக் கூறி, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபா் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.