இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 4 மீனவா்கள் சென்னை வந்தனா்

Published on

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 4 மீனவா்கள் வியாழக்கிழமை சென்னை வந்தனா்.

ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கடந்த ஜூலை 28 -ஆம் தேதி, இந்திய கடலோரப் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 4 மீனவா்களை கைது செய்தனா். பின்னா், அவா்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்களின் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையால் 4 மீனவா்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனா்.

விடுவிக்கப்பட்ட மீனவா்கள் இலங்கை தலைநகா் கொழும்பிலிருந்து, ஏா் இந்தியா விமானம் மூலம் வியாழக்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனா். அவா்களை, விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனா்.

பின்னா், அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனம் மூலம் 4 மீனவா்களும் அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com