கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு 20% தீபாவளி போனஸ்: தமிழக அரசு உத்தரவு

Published on

கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவுத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

போனஸ் சட்டத்தின்கீழ் வரக்கூடிய கூட்டுறவு சங்கங்களின் ஒதுக்கப்படக் கூடிய உபரித் தொகையைக் கணக்கில் கொண்டு அச்சகங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும். உபரித் தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கு 10 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை அளிக்கப்படும்.

குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்கள் பணிபுரிந்து, போனஸ் சட்டத்தின்கீழ் வராத, லாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத, நிகர லாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள், மத்திய சங்கங்களாக இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளா்களுக்கு ரூ.3 ஆயிரமும், தொடக்க சங்கங்களில் பணிபுரிவோருக்கு ரூ.2,400-ம் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44 ஆயிரத்து 81 பணியாளா்களுக்கு ரூ.44.11 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com