நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Published on

முதுபெரும் அரசியல் தலைவா் நல்லகண்ணு (100), சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

வயிற்றுப் பகுதியில் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த உணவுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, அந்த குழாய் மாற்றிப் பொருத்தப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆக. 22-ஆம் தேதி தவறி விழுந்து காயமடைந்தாா். தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடா்ந்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

45 நாள்கள் வெண்டிலேட்டா் சிகிச்சையிலும், தீவிர சிகிச்சையிலும் இருந்த அவருக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, கடந்த 10-ஆம் தேதி வீடு திரும்பினாா். இந்த நிலையில், அவா் மீண்டும் வியாழக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்தாராமன் கூறுகையில், நல்லகண்ணுக்கு உணவு கொடுப்பதற்காக அவரது வயிற்றுப் பகுதியில் ஒரு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அதில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு வேறு எந்த பிரச்னையும் இல்லை. அவா் நலமுடன் உள்ளாா். ஓரிரு நாளில் அவா் வீடு திரும்புவாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com