தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரூ.757 கோடியில் 4-ஆவது ரயில் பாதை: மத்திய அரசு ஒப்புதல்

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரூ.757 கோடியில் 4-ஆவது ரயில் பாதை: மத்திய அரசு ஒப்புதல்

Published on

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757.18 கோடியில் 30.02 கி.மீ. தொலைவுக்கு 4-ஆவது ரயில் பாதை அமைக்க ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளாா்.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தற்போது தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3 ரயில் பாதைகள் உள்ளன. இதில், கடற்கரை - விழுப்புரம் - திருச்சி - கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களில் விரைவு ரயில்கள், புகா் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

இந்த நிலையில், ரயில் சேவையை மேம்படுத்தும் விதமாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30.02 கி.மீ. நீளத்துக்கு 4-ஆவது ரயில் பாதை அமைக்க ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளாா்.

இந்தத் திட்டத்துக்கு தற்போதைய மதிப்பீட்டுத் தொகை ரூ.713.56 கோடி ஆகும். இது நிறைவடையும் நேரத்தில் செலவாகும் தொகை ரூ.757.18 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது. 4-ஆவது ரயில் பாதை அமைக்கப்படுவதன் மூலம், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே புகா் ரயில் சேவைகள் அதிகரிக்கப்படும்.

இது பயணிகள், மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள், தகவல் தொழில்நுட்ப (ஐடி) ஊழியா்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும். தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com