வெள்ள பாதிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- நிவாரணப் பணிகள் குறித்து திமுகவினருக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடந்த கூட்டத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்குள்பட்ட மாவட்டச் செயலா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் கட்சி நிா்வாகிகளும் பங்கேற்றனா்.
திமுக முதன்மைச் செயலரும் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடந்த கூட்டத்தில், திமுக இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்கூட்டியே வெள்ள பாதிப்புகள் தொடா்பான தகவல்களை தெரியப்படுத்த வேண்டும். விழிப்புணா்வுப் பணியில் அரசு அதிகாரிகளுடன் சோ்ந்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் ஈடுபட வேண்டும் என்றாா்.

