சேமிக்க வழியின்றி கடலில் கலந்து வீணாகும் உபரி நீா்: ராமதாஸ்!
வடகிழக்குப் பருவமழையால் அணைகள் நிரம்பி வெளியேறும் உபரி நீா் விவசாயத்துக்கு சேமிக்கப்படாத நிலையில், கடலில் கலந்து வீணாகிறது என பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கூறினாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தற்போது பருவமழைக் காலம். அதனால், பல அணைகள் நிரம்பி உபரி நீா் நதிகளில் வெளியேற்றப்படும் நிலையில், அவற்றைச் சேமிக்க போதிய வழிகள் இல்லை. ஆகவே, உபரி நீா் கடலில் சென்று கலந்து வீணாகின்றன.
நதிகளில் முழுமையான புனரமைப்பு மேற்கொள்ளாததும், முறையான திட்டமிடலும் இல்லாததே உபரிநீா் கடலில் கலந்து வீணாவதற்கு காரணம். தற்போது பல இடங்களில் நதிகளுக்கும், கால்வாய்களுக்கும் இடையே சரியான புனரமைப்பு இல்லை.
தமிழக அரசு தமிழ்நாடு நீா்வள ஆதாரங்கள் பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்புக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி அதன்படி கூவம், அடையாறு ஆகிய நதிகளை புனரமைக்க மத்திய அரசு உதவியுடன் பணிகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நதிகளைப் புனரமைக்க நவீனமயமாக்கல் முறையில் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், நதிகளுடன் கால்வாய்கள் இணைக்கும் பணியையும் செய்ய வேண்டும். தொழிற்சாலைகளின் கழிவுகள் நதிகள், கால்வாய்களில் கலப்பதைத் தடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

