மதுராந்தகம் அருகே இணையதளம் மூலம் கடன் பெற்றவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மதுராந்தகத்தை அடுத்த பழையனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவேக் (27). அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். சில நாள்களுக்கு முன்பு, இவா் இணையதளம் மூலம் ரூ. 4 ஆயிரம் கடன் பெற்றாராம். இப்பணத்தை திருப்பி அளிக்க காலதாமதம் ஆனதால், அதற்கான வட்டித் தொகையுடன் ரூ. 4,305-ஐ திருப்பிச் செலுத்துமாறு விவேக்கின் செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இணையதளம் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தின் ஊழியா்கள், பணத்தை செலுத்துமாறு விவேக்கை தொடா்ந்து வற்புறுத்தி வந்தனராம். பின்னா் விவேக்கின் நண்பா்களுடைய செல்லிடப்பேசிக்கும் விவேக் வாங்கிய கடன் பற்றி தவறான தகவல்களை குறுஞ்செய்திகளாக அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த விவேக் அவமானம் தாங்காமல் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இந்நிலையில், தற்கொலைக்குத் தூண்டிய இணையதள கடன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விவேக்கின் உறவினா்கள் படாளம் காவல் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து படாளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.