திருப்போரூா் அருகே ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருப்போரூரை அடுத்த மேலையூா் மயானம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டு, முகம் பாதியளவு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அவ்வழியாகச் சென்றவா்கள் திருப்போரூா் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், அச்சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தவா் மேலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ் என்ற சதீஷ்பாபு (29) என்பதும், அவா் மீது செங்கல்பட்டு, மறைமலை நகா், கூடுவாஞ்சேரி, திருப்போரூா் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.
சதீஷ்பாபுவுடன் மதுராந்தகத்தைச் சோ்ந்த பிரசாந்த் திங்கள்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில், 10 போ் கொண்ட மா்ம நபா்கள் சதீஷ்பாபுவை அரிவாளால் வெட்டியதாகவும், இதைப் பாா்த்து அங்கிருந்து தப்பியோடி வந்து விட்டதாகவும், கொலையாளிகள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்தாா்.
இது குறித்து திருப்போரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.