செங்கல்பட்டு: தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணித் துறையின் செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத் திறப்பு விழா செங்கல்பட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தாா்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலகம் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், செங்கல்பட்டு தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டதையடுத்து, செங்கல்பட்டில் மாவட்ட அலுவலகம் செங்கல்பட்டு, வேதாசலம் நகரில் அமைக்கப்பட்டது.
இதனை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலராக இரா.ஜாஸ்மின் குத்துவிளக்கேற்றி வைத்து பொறுப்பேற்றாா். உதவி மாவட்ட அலுவலராக க.திருநாவுக்கரசு பொறுப்பேற்றாா். மேலும், அலுவலகத் திறப்பு விழாவின்போது, செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணி அலுவலகத்தின் துணை இயக்குநா் மீனாட்சி விஜயகுமாா் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினாா்.
செங்கல்பட்டு, மறைமலை நகா், திருக்கழுகுன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.