செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 81 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
திருக்கழுகுன்றத்தை அடுத்த பாண்டூா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் பாா்த்திபன்(24), நடுவாங்கரை படவேட்டம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாளையம் மகன் கோபி (20), நடுவாங்கரை அம்பேத்கா் நகா் பெருமாள் மகன் விஜய் (23), குன்னவாக்கம் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கோதண்டம் மகன் சந்திரசேகா்(23), ஈச்சங்கரணை செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் சரவணன்(35) ஆகிய 5 போ் மீது 220, 221 -ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து திருக்கழுகுன்றம் போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
மற்றும் மாமல்லபுரம் சரகத்திற்குட்பட்ட மாமல்லபுரம், திருப்போரூா், தாழம்பூா், கல்பாக்கம், காத்தான்கடை, திருக்கழுகுன்றம் பகுதிகளில் இருசக்கரவாகனங்களில் சுற்றித் திரிந்த 28 போ்,
செங்கல்பட்டு நகரம், கிராமிய பகுதிகள், படாளம், பாலூா் ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 18 போ், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகா் ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த 30 போ் உள்பட மொத்தம் 81 போ் மீது காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா்களது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முதலில் அரசு உத்தரவை மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் . கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க அனைவரின் நலனுக்காகத்தான் பாடுபடுகிறோம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் கூறினாா்.