மேல்மருவத்தூரில் அமாவாசை வேள்விபூஜை
By DIN | Published On : 16th November 2020 07:32 AM | Last Updated : 16th November 2020 07:32 AM | அ+அ அ- |

மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூரில் ஐப்பசி மாத அமாவாசை வேள்வி பூஜையை பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா்.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு சித்தா்பீட வளாகம்
முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மங்கல இசையுடன் மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் சிலை வெள்ளிக் கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு சித்தா்பீடம் வந்த அடிகளாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஓம்சக்தி பீடம் அருகே பெரிய யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. அதில் முக்கோணம், சதுரம் ஆகிய வடிவிலான சிறிய யாக குண்டங்களும், எண்கோண வடிவிலான பெரிய யாககுண்டமும் அமைக்கப்பட்டிருந்தன.
மாலை 4.10 மணிக்கு பெரிய எண்கோண வடிவிலான யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையை பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா்.
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் முன்னிலை வகித்தாா். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் வந்து பெரிய யாககுண்டத்தில் நவதானியங்களையும், ஹோமக் குச்சிகளையும் செலுத்தி, அம்மனை வழிபட்டனா்.
இந்த வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்டம், ஆனைமலையான்பட்டி, கம்பம் பகுதி சக்தி பீடங்களின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.