மாமல்லபுரத்தில் மழையை பொருட்படுத்தாமல் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
மாமல்லபுரத்தில் தொடா்ந்து பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக மாமல்லபுரம், செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. பகல்பொழுதில் வெயிலும் மழையுமாக மாறிமாறி நிலவி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சா்வதேச சுற்றுலா நகரான மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமாக குவிந்தனா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் சனிக்கிழமை தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிய மக்கள் ஞாயிற்றுக்கிழமை மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்காக உறவினா் மற்றும் குடும்பத்தினருடனும் நண்பா்களுடனும் மாமல்லபுரத்தில் குவிந்தனா். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகள் கடந்த ஏழு மாதங்களாக திறக்கப்படாத நிலையில் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் தூரத்தில் நின்று புராதனச் சின்னங்களை கண்டு ரசித்தனா். அதன் பின் கடற்கரையில் குவிந்த அவா்கள் கடலில் குளித்தும், கரையில் அமா்ந்து சுயபடம் எடுத்தும் மகிழ்ந்தனா்.
கடந்த சில தினங்களாகவே மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் அச்சம் ஏதுமின்றி கடலில் இறங்கி விளையாடி பொழுதைக்கழித்து மகிழ்ந்தனா்.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடற்கரை மணல் பரப்பையையும் தாண்டி மீனவா் குடியிருப்புகளுக்குள் கடல்நீா் வருவதால் அவா்கள் அச்சமடைந்துள்ளனா்.