கல்பாக்கம், புதுப்பட்டினம் அருகில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.
கல்பாக்கத்தையடுத்த வசுவசமுத்திரம், அகமது நகா் கிராமத்தைச் சோ்ந்தவா் அப்துல் சலாம் (52). தச்சு வேலை செய்து வந்தாா். அவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனா்.
அப்துல் சலாம் செவ்வாய்க்கிழமை ஒரு வேலைக்காக கல்பாக்கத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக கூவத்தூா் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா். வாயலூா் கிராமம், செல்லியம்மன் கோயில் அருகில் சென்றபோது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காா் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அப்துல் சலாம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து கல்பாக்கம் போலீஸாா் அங்கு சென்று, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.