செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த ஆய்வுக்கூட்டத்தில், வரும் வடகிழக்கு பருவமழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திட்டப் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்குமாறு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் அறிவுறுத்தினாா். மேலும் வடகிழக்கு பருவமழையினால் வெள்ள பாதிப்புகள் ஏற்படும்போது செயல்படும் விதம் குறித்து முதல் நிலை உதவியாளா்களுக்கு பயிற்சி அளிக்குமாறு வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெ.கண்ணன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்டஇயக்குநா் செல்வகுமாா், வருவாய் அலுவலா் கா.பிரியா மற்றும் தொடா்புடைய அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.