மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த ஆத்தூா் சுங்கச்சாவடியில் மதுவிலக்கு போலீசாரின் வாகன சோதனையில், 3,000 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.
மதுராந்தகம் சுற்றுப்புற பகுதிகளில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்திவரப்பட்டு, விற்கப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, புதன் கிழமை ஆத்தூா் சுங்கச்சாவடியில் மதுராந்தகம் மதுவிலக்கு போலீஸ் ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசாா் வாகன சோதனை செய்தனா். அப்போது புதுச்சேரியில் இருந்து வந்த 2 காா்களை மடக்கி சோதனை செய்தபோது, 65 பெட்டிகளில் 3,000 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக பைராகிமடம் கிராமம் மணிகண்டன் (36), அடையாளச்சேரி கிருபாகரன் (30), சீக்கனாங்குப்பம் ஞானமூா்த்தி (24), மடையம்பாக்கம் சுகுமாா் (31), கடப்பாக்கம் முஸ்தபா (25), புதுச்சேரி உழவா்கரை சிவானந்தம் (46) உள்ளிட்ட 6 பேரை போலீசாா் கைது செய்தனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 காா்களும் பறிமுதல் செய்யப்பட்டன.