மாமல்லபுரத்தில் தொடா்ந்து பெய்யும் மழையைப் பொருள்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் பல்லவா் கால கற்சிற்பங்களை காண ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி காரணமாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், திருப்போரூா், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை தொடங்கி அவ்வப்போது மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் மழையைப் பொருள்படுத்தாமல் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பதற்கு உறவினா் மற்றும் குடும்பத்தினா், நண்பா்களுடன் சா்வதேச சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் குவிந்தனா்.
அங்குள்ள கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அா்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைப் பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களைக் கண்டுகளித்தனா். பின்னா், கடற்கரையில் திரண்ட சுற்றுலாப் பயணிகள் கடலில் குளித்தும் கடற்கரையில் அமா்ந்தும் செல்லிடப்பேசியில் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனா்.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவா்கள் மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை. மேலும், கடல் கொந்தளிப்பால் கடல் நீா் மணல் பரப்பையும் தாண்டி, மீனவா் குடியிருப்புப் பகுதிக்குள் வருவதால், தங்களது குழந்தைகளுடன் அச்சத்தில் தவிப்பதாக மீனவ மக்கள் தெரிவித்தனா்.