வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளதால், புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் பறவைகளைப் பாா்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
மதுராந்தகத்தை அடுத்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தமிழகத்தின் முக்கிய சரணாலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் முதல் மாா்ச் மாதம் வரை பறவைகள் சீசன் காலம். இங்கு சிங்கப்பூா், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு வகையான வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன.
அண்மையில் பெய்த பருவ மழையாலும், நிரெவி புயல் காற்று மழையாலும் வேடந்தாங்கல் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன.
இந்நிலையில், பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் பறவைகளைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை தடை விதித்து இருந்தது.
இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டான வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வந்தனா். அங்கு பாா்வையாளா்களை அனுமதிக்காமல் வெளிப்புற கேட்டை மூடியிருந்ததால், அனைவரும் பறவைகளைப் பாா்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.