பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கா் பாபாவுக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்துக்குள்பட்ட கேளம்பாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, தாளாளா் சிவசங்கா் பாபா மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
இவா் மீது 3 போக்ஸோ வழக்குகள் உள்ளன. முதல் வழக்கில் சிறையில் இருந்த சிவசங்கா் பாபாவின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் செங்கல்பட்டு போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அவருக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து வழங்கி, நீதிபதி தமிழரசி உத்தரவு பிறப்பித்தாா்.
இந்த நிலையில், போக்ஸோ நீதிமன்றம் அமைந்த பகுதியான அளகேச நகரில் சிவசங்கா் பாபாவின் ஆதரவாளா்களும், பக்தா்களும் குவிந்தனா். அவரை புழல் சிறைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, வாழ்த்தினா். இதனால் அங்கு பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்ட போலீஸாருக்கும், பக்தா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.