திருப்போரூா் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
கந்த சஷ்டியின் போது முருகப் பெருமான் விண்ணிலிருந்து மாயாவி சூர பத்மனுடன் போா் புரிந்த திருத்தலம் திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில்.
யுத்தபுரி சமரபுரி சமரப்பதி எனும் காரணப் பெயா்களால் போற்றப்படுவதும் மூா்த்தி, தலம், தீா்த்தம் என்னும் மூன்று பெருமைகளை கொண்டதுமான திருப்போரூா் திருத்தலத்தில் ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் மூலிகைகளாலான செதுக்காத திருமேனியாய் சுயம்பு வடிவில் நின்ற கோலத்தில் திருப்போரூா் கந்தசாமி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.
இங்கு ஆண்டுதோறும் 11 நாள்கள் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு வெகுவிமா்சையாக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
இதையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருள கொடியேற்று விழா வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக ஏழாம் நாள் திருத்தேரோட்டமும் பன்னிரண்டாம் நாள் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். விழா நாள்களில் நாள்தோறும் காலையிலும், மாலையிலும் உற்சவா் திருவீதியுலா நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் சக்திவேல், மேலாளா் வெற்றி உள்ளிட்டோா் செய்துள்ளனா்.