மதுராந்தகம் அருகேயுள்ள திருமலைவையாவூா் சப்தகன்னியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கிராமத்தில் பொதுமக்களால் சப்தகன்னியா் கோயில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மகாகும்பாபிஷேக விழா கடந்த 11-ஆம் தேதி தொடங்கி விக்னேஷ்வர பூஜை, தனபூஜை, கோபூஜை, கணபதி ஹோமம், நாடி சந்தனம், மூலவா் யந்திர ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
ஞாயிற்றுக்கிழமை காலை கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, மூலவா் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு மலா் ரதத்தில் அம்மன் உற்சவா் சிலை அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளில் உலா வந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.