செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவையொட்டி 7ஆம் நாள் புதன்கிழமை பஞ்சரத தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் மலைக்கோயில், பக்தவத்சலேஸ்வரர் தாழக் கோயிலில் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் உள்ளது.
பட்சி தீர்த்தம் கழுதொழும் சிவனாக வீற்றிருக்கும் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த மே 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு இவ்விழாவின் 7 ஆம் நாள் உற்சவமாக பஞ்சரத தேரோட்ட தேர் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவையொட்டி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
இதையெடுத்து அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேர், முருகர் தேர், அம்மன் தேர் , சண்டிகேஸ்வரர் தேர், பெரிய சாமி தேர் ஆகிய ஐந்து தேர்களிலும் சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் வீற்றிருக்க பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து சாமியை வழிபட்டனர். இவ்விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர். வழிநெடுகிலும் ஆன்மீக பக்தர்கள் அன்னதானங்கள், குளிர்பானங்கள் , மோர், தண்ணீர் என மாடவீதிகளைச் சுற்றி வழங்கினர்.
தேர்கள் தாளக் கோயில் பக்தவத்சலேஸ்வரர் கோயில் முகப்பில் தேர் நிலையில் இருந்து புறப்பட்டு மதுராந்தகம் சாலை வழியாக 4 மாடவீதிகளை சுற்றி மதியம் தேர்நிலையை வந்தடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர். காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவ சேவை, தீயணைப்பு துறை தயார் நிலையில் இருந்தது. திருப்போரூர் பேரூராட்சி செயலாளர் ஜெயக்குமார், திருப்போரூர் பேரூராட்சித் தலைவர் யுவராஜ் ஆகியோர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்தன், பாரதி தாசன், செயல் அலுவலர் மேகவண்ணன் , தக்கார் மற்றும் செயல் அலுவலர் வெங்கடேசன், மேலாளர் விஜயன் பல்வேறு கோயில்களின் செயல் அலுவலர்கள் சிவசண்முக பொன்மணி மற்றும் சிவாச்சாரியார்கள், பணியாளர்கள் உற்சவ உபயதாரர்கள் மற்றும் நகர பொதுமக்கள் செய்து வருகின்றனர்.