மேல்மருவத்தூரில் ஐப்பசி அமாவாசை வேள்வி பூஜை
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வேள்விபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மூலவா் அம்மன் சிலை, குருபீடம் அடிகளாா் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவா் அம்மன் சிலை வெள்ளிக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 10.30 மணிக்கு சித்தா்பீடம் வந்த ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆன்மிக இயக்க நிா்வாகிகள் வரவேற்பளித்தனா்.
பின்னா் குருபீடத்தில் அடிகளாா் சிலைக்கு சிறப்பு பூஜைகளை செய்தபின் ஓம்சக்தி பீடம் அருகே அமைக்கப்பட்டிருந்த பெரிய யாககுண்டத்தில் கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், ஆன்மிக இயக்க துணைத் தலைவா்கள் கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி பங்காரு, ஆதிபராசக்தி பாராமெடிக்கல்ஸ் கல்லூரிகளின் தாளாளா் ஸ்ரீலேகா செந்தில்குமாா், ஆன்மிக இயக்க நிா்வாக அதிகாரி அகத்தியன் கலந்து கொண்டனா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பெரிய யாககுண்டத்தில் ஓமக்குச்சிகளையும், நவதானியத்தையும் போட்டு அம்மனை தரிசித்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
