மெரீனா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் 19 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நவம்பர் 14-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்படுகிறது.
இதன் தொடக்க விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் பங்கேற்று இதனை திறந்து வைக்கிறார். இதற்காக கலங்கரை விளக்கம் ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பழைய லிப்டுக்கு பதிலாக புதிய லிப்டு பொருத்தப்பட்டுள்ளது.
இது 23 விநாடிகளில் 9-வது மாடியை சென்றடையும். அதன்பிறகு 10-வது மாடிக்கு 25 படிகட்டுகள் நடந்து செல்ல வேண்டும்.
10-வது மாடியிலிருந்து வங்கக்கடல் மற்றும் சென்னையின் எழில்மிகு தோற்றத்தை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம். 10-வது மாடி வரை செல்வதற்கு 242 படிக்கட்டுகள் உள்ளன. மாற்று திறனாளிகளுக்காக 2 சாய்தள பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
20 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டோர் மெட்டல் டிடெக்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. கலங்கரை விளக்கத்தை சுற்றிலும் அழகிய புல்வெளிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அமர இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கலங்கரை விளக்கத்தின் பிரமாண்டமான மின் விளக்கைப் போன்ற மின்விளக்குடன் கூடிய புதிய அருங்காட்சியகம் தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு மட்டுமின்றி கடல்சார் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கும் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வரும் 14-ம் தேதி கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் இதனை திறந்து வைக்கிறார்.