சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் தொடர்பாக, தமிழக அரசு சனிக்கிழமை ஆலோசனை நடத்தியது.
தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்தும், அதனுடைய விரிவாக்கப் பணிகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் முதல் கட்ட விரிவாக்கப் பணிகளை முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் தொடக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடந்தது.
இந்தக் கூட்டத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஆர்.அழகுமீனா, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் கஜலட்சுமி, எ.சுந்தரவல்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.