சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 4 வயது சிறுமி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் வளர்ப்பு தந்தைக கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சிந்தாதிரிப்பேட்டை சாமிக்கண்ணு தெருவைச் சேர்ந்தவர் ஜெரால்ட் (40). இவரது மனைவி சங்கீதா. ஜெரால்ட் வழக்குரைஞராகவும், சங்கீதா பேராசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இத்தம்பதிக்கு குழந்தை இல்லாததால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மிருதுளா (4) என்ற சிறுமியை தத்தெடுத்தனர். அதே ஆண்டு ஜூலை மாதம் மிருதுளா குளியலறையில் வழுக்கி கீழே விழுந்து பலத்த காயமடைந்துவிட்டதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதையடுத்து மிருதுளாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவரது சடலம் தடயவியல் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, இதுதொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் சாதாரண சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். தடயவியல் துறையின் அறிக்கையில், "மிருதுளா உடலில் 6 காயங்கள் இருந்தன. அந்தக் காயங்களின் காரணமாகவே அவள் இறந்துள்ளார். மிருதுளா பலமாக தாக்கப்பட்டதால் அந்த காயம் ஏற்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை, கொலை வழக்காக சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் மாற்றினர். இதையடுத்து, வழக்குத் தொடர்பாக போலீஸார் ஜெரால்டிடம் வியாழக்கிழமை விசாரணை செய்தனர். அதில், ஜெரால்ட் மிருதுளாவை தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் ஜெரால்ட்டை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.