ஆயுதப்படைக் காவலர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த பாலுத்தேவர் மகன் செளந்திரபாண்டி (27), சென்னை மாநகர காவல்துறை ஆணையரகத்தில் ஆயுதப்படை பிரிவுக் காவலர். மனைவி சசிகலா. இருவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
சில மாதங்களில் இருவரும் பிரிந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இருவீட்டாரும் சமாதானம் பேசி இருவரையும் ஒன்றாக வாழும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து சென்னை எர்ணாவூர் பாரதியார் நகரில் செளந்திரபாண்டி மனைவியுடன் குடியேறினார். ஆனாலும் இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை சசிகலா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா சிகிச்சைக்குப் பிறகு புதன்கிழமை வீடு திரும்பியுள்ளார்.
நண்பர்கள் சிலருக்கு செளந்திரபாண்டி வியாழக்கிழமை வாட்ஸ் அப்பில் குறுந்தகவல்களில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதையறிந்த வேளச்சேரியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் செளந்திரபாண்டியனின் செல்லிடப்பேசிக்குத் தொடர்பு கொண்டபோது போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர் நேரில் வந்தபோது வீட்டின் கதவு உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் கதவுகளைத் திறந்து பார்த்தபோது செளந்திரபாண்டி, சசிகலா இருவரும் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. எண்ணூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.