திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான மெட்ரோ ரயில் சேவையில் பயணச்சீட்டு வழங்கப்படாமல், ஸ்மார்ட் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னையில் முதல்முறையாக மெட்ரோ ரயில் சுரங்க வழித்தடச் சேவை ஞாயிற்றுக்கிழமை (மே14) துவக்கி வைக்கப்பட்டது. தற்போது கோயம்பேடு - ஆலந்தூர், பரங்கிமலை - விமான நிலையம் இடையிலான உயர் நிலை வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கு டோக்கன் வடிவிலான பயணச் சீட்டும் வழங்கப்படுகிறது; ஸ்மார்ட் கார்டு திட்டமும் உண்டு.
ஆனால், திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான சுரங்கப் பாதை வழித்தடத்தில் பயணச் சீட்டு கொடுக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக ரூ.10-க்கு ஸ்மார்ட் கார்டு வாங்கி அதனை ரீசார்ஜ் செய்ய பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்குப் பயணிகள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
கட்டணக் குறைப்பு: மெட்ரோ ரயில் சேவையை மக்களிடம் பிரபலப்படுத்த கட்டணத்தில் இருந்து 40 சதவீத சலுகையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இந்த நடைமுறை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைமுறையில் இருக்கும். கட்டணத்தை 40 சதவீதம் குறைத்துள்ளதாலும், பேருந்து ஊழியர் போராட்டம் நடைபெற்றதாலும் கடந்த திங்கள்கிழமை (மே 15) 42 ஆயிரம் பேரும், செவ்வாய்க்கிழமை (மே 16) 40 ஆயிரம் பேரும், திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தினர். பேருந்து ஊழியர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் இப்போது கூட்டம் குறைந்து வருகிறது.
ஸ்மார்ட் கார்டு கட்டாயம்: மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் ஒன்றுதான் பயணிகளுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஆனால், அவசரகால விரைவான பயணத்துக்கு மெட்ரோ ரயில் பயணக் கட்டணம் ஆட்டோ, டாக்ஸிகளைவிட குறைவுதான் என்றாலும், இப்போது சுரங்க வழித்தடத்தில் பயணச் சீட்டு இல்லாமல் அனைவரையும் ஸ்மார்ட் கார்டுக்கு கட்டாயப்படுத்துவது சரியல்ல என்பது பெரும்பாலான பயணிகள் கருத்தாக உள்ளது. இந்த நடைமுறையைக் கைவிட்டு, பயணச் சீட்டு வழங்க வேண்டும் என்பது மெட்ரோ ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.