பிரபல நகைக் கடையில் ரூ.50 லட்சத்துடன் காவலாளி தலைமறைவு

சென்னை தியாகராய நகரில் பிரபல நகைக் கடையில் ரூ.50 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு தப்பியோடிய காவலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.
Published on
Updated on
1 min read

சென்னை தியாகராய நகரில் பிரபல நகைக் கடையில் ரூ.50 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு தப்பியோடிய காவலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரபல நகைக் கடையில் வெள்ளி, தங்க, வைர நகைகள் விற்கப்படுவதுடன், பழைய நகைகளை வாங்குவது, நகைக் கடன் வழங்குவது போன்ற வியாபாரமும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தக் கடையின் காசாளர் ராதாகிருஷ்ணன், பெங்களூருவில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து ரூ.50 லட்சம் பணத்தை செவ்வாய்க்கிழமை (செப்.5) பெற்றுக் கொண்டு, தியாகராய நகர் நகைக் கடைக்கு கொண்டு வந்தார்.
அன்று மாலை, கடையில் காவலாளியாக பணியில் இருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அயோத்திநாத் யாதவ் (47) என்பவரிடம் ரூ.50 லட்சத்தை ஒப்படைத்து, அதற்குரிய ஆவணங்களில் கையெழுத்து பெற்றார். 
பின்னர் ரூ.50 லட்சத்தை காவலாளி அயோத்திநாத் யாதவ்விடம் ஒப்படைத்தது குறித்து அந்தக் கடையின் கணக்குப் பிரிவு மேலாளர் முருகேசனிடம் செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்தார்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை கடையின் மேலாளர் தினகரன் கடைக்கு வந்தபோது, பாதுகாப்பு பெட்டகத்தில் ரூ.50 லட்சம் இல்லாததும், காவலாளி அயோத்திநாத் மாயமாகி இருப்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், ரூ.50 லட்சத்துடன் அயோத்திநாத் தப்பியோடியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான அயோத்திநாத்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com