ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நடிகர் விஷால், அத்தொகுதிக்குட்பட்ட தனது ரசிகர்களை ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவர் திங்கள்கிழமை மதியம் 12.30 மணியளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை, திருவொற்றியூர் பகுதியிலுள்ள நடிகர் விஷால் ரசிகர் மன்றத்தின் அகில இந்தியத் தலைவர் ஜெயசீலன் இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
நடிகர் விஷால் இதில் கலந்து கொண்டு, சென்னை, திருவள்ளூர் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் மீனவர் அணி நிர்வாகிகள் ஆகியோரிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், உங்களின் குறைகளை தீர்ப்பதற்காகவே இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகிறேன் எனவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் நடிகர் விஷாலின் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.