புழல் மத்திய சிறையில் 3 நாள்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.
தமிழ்நாடு கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைத்துறைத் தலைவர் அசுலோஷ்சுக்லா உத்தரவின்படி தமிழக சிறைச்சாலைகளில், கைதிகளுக்கான பல்வேறு சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றுவோம் என்ற நோக்கத்துடன் புழல் சிறையில் முதன்முறையாக புத்தகக் கண்காட்சி 3 நாள்கள் நடைபெற்றது.
இந்த கண்காட்சியை கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 15) சிறைத்துறை துணைத் தலைவர் ஆ.முருகேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில், சிறைக் கண்காணிப்பாளர்கள் ருக்மணிபிரியதர்ஷினி, செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், எழுத்தாளர்
எஸ்.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு, வாசிப்போம், நேசிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) இந்திய வருவாய்ப் பணி துணை இயக்குநர் அருண்பிரசாத், வாசிப்பின் அவசியம் குறித்து உரையாற்றினார். சிறையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் கைதிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சென்னை தமிழ்நூல் மேம்பாட்டு குழுமம் நடத்திய இக்கண்காட்சியில், சாகித்ய அகாதெமி, பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தாரின் 1500-க்கும் மேற்பட்ட நூல்கள் இடம் பெற்றன.
நிகழ்வில், சிறை நிர்வாக அலுவலர் நாமதுரை, கூடுதல் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், சிறை அலுவலர் தர்மராஜ், மத்திய சிறையின் மன இயல் நிபுணர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.