சென்னை ஆலந்தூரில் இஸ்ரோ அதிகாரியின் கார் கண்ணாடியை உடைத்து நகை, மடிக்கணினி திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் பொது மேலாளராகப் பணிபுரிபவர் நாகராஜ். இவர், வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் தனது மகளை அழைப்பதற்காக வியாழக்கிழமை காரில் வந்தார். சென்னை ஆலந்தூர் அருகே ஒரு உணவகம் முன்பு நாகராஜ், தனது காரை நிறுத்திவிட்டு, சாப்பிடச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் நாகராஜ் காருக்கு திரும்பி வந்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதிலிருந்த 3 பவுன் தங்க நகை, மடிக்கணினி, கல்விச் சான்றிதழ், ஏ.டி.எம். கார்டு ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பரங்கிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். அங்குள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் 3 மர்ம நபர்கள், நாகராஜ் கார் கண்ணாடியை உடைத்து திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த 3 நபர்களையும் தேடி வருகின்றனர்.