சென்னையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதலாக மெட்ரோ ரயில் சேவை வியாழக்கிழமை முதல் இயக்கப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது 10 நிமிஷத்துக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இனி வியாழக்கிழமை முதல் 7 நிமிஷத்துக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
இதன் காரணமாக வார நாள்களில் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நெரிசல் மிகுந்த நேரமாகும். இந்த நேரங்களில் நேரு பூங்காவில் இருந்தும், விமான நிலையத்தில் இருந்தும் பரங்கிமலைக்கு கூடுதலாக மெட்ரோ ரயில்கள் 7 நிமிஷத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
இதைக் கணக்கில் கொண்டு நேரு பூங்காவில் இருந்து விமான நிலையத்துக்கு முதல் ரயில் காலை 5.54 மணிக்கும், கடைசி ரயில் இரவு 9.54 மணிக்கும் புறப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து நேரு பூங்காவுக்கு முதல் ரெயில் காலை 6.05 மணிக்கும், கடைசி ரயில் இரவு 9.55 மணிக்கும் புறப்படும்.