இளைஞர்களிடம் கதர் ஆடை, கைவினைப் பொருள்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கதர் கிராம கைத்தொழில் ஆணையத்தின் தலைவர் வினய்குமார் சக்சேனா தெரிவித்தார்.
கதர் கிராம கைத்தொழில் ஆணையம் தியாகராயநகர் பாண்டி பஜாரில் கைவினைப் பொருள்கள் விற்பனை அங்காடி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆணையத் தலைவர் வினய்குமார் சக்சேனா அங்காடியைத் திறந்து வைத்துப் பேசியது:
கைவினைக் கலைஞர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காதி பயன்பாட்டை இளைஞர்களிடையே ஊக்குவிக்க குளோபஸ் நிறுவனத்துடன் இணைந்து அங்காடி திறக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் சில வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து கதர் அங்காடிகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
புது ரகங்களில் கதராடைகள்: இந்த அங்காடியில் இளைஞர்களைக் கவரும் விதமாக புது ரங்களில் கதர் சட்டைகள், குர்தாக்கள், பெண்களுக்கான கதர் சுடிதார், அணிகலன்கள், கைவினைப் பொருள்கள், தேன், ஆயுர்வேதப் பொருள்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. திறப்பு விழாவில், பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கதர் கிராம கைத்தொழில் ஆணையத்தின் தெற்கு மண்டலத் தலைவர் ஜி.சந்திரமௌலி, மாநில இயக்குநர் லட்சுமி நாராயணன், விற்பனைப் பிரிவு இயக்குநர் ஜவகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.