ஆக்கிரமிப்பில் இருந்த கோயில்களுக்குச் சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-இந்து சமய அறநிலைக்குச் சொந்தமான நிலங்கள் சில ஆக்கிரமிப்பில் இருந்தன. அவற்றை மீட்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆக்கிரமிப்பில் இருந்த 3,102.54 ஏக்கர் நிலங்களும், 691 கிரவுண்ட் 1177 சதுர அடி பரப்பு மனைகளும், 237 கிரவுண்ட் 1591 சதுர அடி பரப்புள்ள கட்டடங்களும் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.3,082.68 கோடியாகும்.
35,973 கோயில் சொத்துக்கள்: கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளைக் கண்டறிய கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், திருக்கோயில் நிர்வாகிகள் கொண்ட குழுக்கள் அனைத்து கோயில்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களால் இதுவரை 35,973 கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.
சிலை திருட்டு தடுப்பு: கோயில்களின் சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக அளவீட்டு விவரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, 3.42 லட்சம் சிலைகள் குறித்த முழுமையான அளவீட்டு விவரங்கள் கணினியின் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. திருக்கோயில்களின் பாதுகாப்புக்கென 5,024 களவு எச்சரிக்கை மணி, 1,609 கண்காணிப்பு கேமராக்கள், உறுதியான இரும்பு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. 2,599 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 100 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட உலோக, கற்சிலைகள் குறித்த தகவல்கள் பல்வேறு தரப்பில் இருந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சிலைகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.