சென்னை கொரட்டூர் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
சென்னையை அடுத்த கொரட்டூர் ஏரியைச் சுற்றி கள்ளிக்குப்பம், கருக்கு, மேனாம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. சமீபத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்த வீடுகள் மற்றும் கட்டடங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அம்பத்தூர் வருவாய்த் துறையினர், கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுத்தனர்.
மூகாம்பிகை நகர், முத்தமிழ் நகர், கங்கை நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரியின் மத்தியில் 598 வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இவற்றை அகற்ற பொதுப்பணித் துறை அதிகாரிகள் இரண்டு முறை நோட்டீஸ் வழங்கினர். ஆனாலும் வீடுகளைக் காலி செய்ய குடியிருப்புவாசிகள் மறுத்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின்சாரத்தைத் துண்டிக்கப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள், அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஆட்சியர் சண்முகசுந்தரம், அம்பத்தூர் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம், வட்டாட்சியர் சிராஜ்பாபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். வீடுகளைக் காலி செய்ய பொதுமக்கள் மறுத்தனர். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு: வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறையினர், அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம் முத்தமிழ்நகர் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் 2 துணை ஆணையர்கள், 7 உதவி ஆணையர்கள், 20 ஆய்வாளர்கள் உள்பட 700-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு வந்தனர். 25-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டிருந்தன.
ஏரியில் உள்ள வீடுகளை அகற்ற முற்பட்டபோது, உண்ணாவிரதத்தில் இருந்த ஆக்கிரமிப்பாளர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் ஜேசிபி இயந்திரங்களை மறித்தனர். அப்போது நடந்த கல்வீச்சில் ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன. இந்நிலையில், சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினார். அதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.