பாரிமுனையில் உள்ள பூ கடைகளுக்கு வைக்கப்பட்ட "சீலை' ஒரு மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என்று சி.எம்.டி.ஏ. மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பாரிமுனை பத்ரியன் தெருவில் உள்ள மொத்த பூ விற்பனை செய்யும் கடைகளுக்கு 48 மணி நேரத்தில் "சீல்' வைத்து இழுத்து மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதியின் உத்தரவின்படி 139 பூக் கடைகளுக்கு "சீல்' வைக்கப்பட்டன.
மேல் முறையீடு: இதை எதிர்த்து பூ வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இம்மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், உயர் நீதிமன்றம் மொத்த பூ வியாபாரிகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டது. ஆனால், சில்லறை பூ வியாபாரிகளின் கடைகளையும் அதிகாரிகள் அப்புறப்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
உத்தரவுக்குத் தடை: இதையடுத்து நீதிபதிகள், "மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்த நிலையில், அதிகாரிகள் எப்படி கடைகளுக்கு "சீல்' வைத்தனர் என்று கேள்வி எழுப்பினர். பின்னர், "தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், பூ கடை பகுதியில் உள்ள கடைகளுக்கு வைக்கப்பட்ட "சீலை' ஒரு மணி நேரத்தில் அகற்ற வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
அவற்றில் மொத்த பூ வியாபாரம் செய்யக் கூடாது. இதை பூ வியாபாரிகள் யாராவது மீறுவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி.ஏ.) மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்துக் கூறினால், சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்படும்' என்று எச்சரித்தனர். இதையடுத்து சீல் அகற்றப்பட்டது.