மணலியில் தனியார் நிறுவன ஊழியர் வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
மணலியைச் சேர்ந்த கோபால் (55), எண்ணூர் தனியார் நிறுவனப் பணியாளர். மனைவி மீனாட்சி. மகன் கார்த்திகேயன், கல்லூரி மாணவர். மகள் கோகிலாவுக்குத் திருமணமாகி விட்டது.
வெள்ளிக்கிழமை காலை கோபால் கடையொன்றில் நாளிதழ் வாங்கிக் கொண்டு வீடருகே வந்தபோது வேகமாக ஓடி வந்த ஒருவர் கோபாலை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடினார். பலத்த காயத்துடன் இருந்த கோபால் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மணலி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்.
இதில் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான விடியோ காட்சிகளின் அடிப்படையில் அதேப் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (23) என்பவர் முன்விரோதம் காரணமாக கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
அதையடுத்து ராஜசேகரை அழைத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், அவரை கைது செய்தனர்.