நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நடிகர் மன்சூர் அலிகான், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. இந்த குற்றச்சாட்டை என்னால் நிரூபிக்க முடியும்.
இதுதொடர்பாக கடந்த ஜூலை 10 -ஆம் தேதி, இந்திய தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் மனு கொடுத்தேன்.அந்த மனுவை இதுவரை அவர்கள் பரிசீலிக்கவில்லை. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை என்னிடம் ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அவரே ஆஜராகி வாதிட்டார்.