மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: வட உள் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், வளிமண்டலத்தில் நிலவிய மேலடுக்கு சுழற்சி தற்போது ராயலசீமா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.
ஈரோட்டில் 90 மி.மீ.: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சேலத்தில் 70 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம், பெரம்பலூர், சேலம் மாவட்டம் ஓமலூர், வேலூர், விரிஞ்சிபுரத்தில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.