தமிழ்நாடு விரைவு ரயிலில் பயணித்த பெண்களிடம் நகை, பணம் பறிப்பு
தில்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு விரைவு ரயிலில் இரண்டு பெண் பயணிகளிடம் பணம், நகையை பறித்துச் சென்றவர்களை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர்.
தில்லியில் இருந்து வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஆந்திரம் வழியாக சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு சென்னை வந்தடைந்தது. ரயிலின் எஸ்-4 பெட்டியில் ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரியைச் சேர்ந்த கீதா ரம்யாஸ்ரீ (22) விஜயவாடாவில் இருந்து ரயிலில் பயணம் செய்தார். ரயில் ஆந்திர மாநிலம், ஓங்கோல் என்ற இடத்தில் சிக்னலுக்காக அதிகாலை 3 மணியளவில் நிறுத்தப்பட்டது.
அப்போது கீதா ரம்யாஸ்ரீ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். அப்போது, நடைமேடையில் நின்ற யாரோ, கீதா ரம்யாஸ்ரீ தலைக்கு தலையணை போல வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். அந்த பையில் ரொக்கம் ரூ.25,000 மற்றும் ரூ.5,000 மதிப்புள்ள செல்லிடப்பேசி ஆகியன இருந்தன. அதேபோல, அந்த ரயிலின் எஸ் -3 பெட்டியில் தஞ்சாவூரைச் சேர்ந்த மைதிலி (35) தனது மகனுடன் தில்லியில் இருந்து பயணம் செய்துள்ளார். அவரிடம் அடையாளம் தெரியாத நபர் 7 சவரன் நகையைப் பறித்துச் சென்றார்.
இந்த ரயில் சனிக்கிழமை அதிகாலை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. பணம், நகை, செல்லிடப்பேசி ஆகியவற்றை பறிகொடுத்த இரண்டு பெண்களும் ரயில்வே போலீஸ் ஆய்வாளர் தாமஸிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து அந்த வழக்கை ஓங்கோல் ரயில்வே போலீஸாருக்கு மாற்றினர்.